நினைவு நதியில்...



இப்போது மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் அமர்ந்து கார்டூன் பார்க்கும் குழந்தைகளை பார்க்கும் போது சில வேளை என் பால்யம் எனக்கு ஞாபகம் வரும் . இப்போது அளவுக்கு அதிகமாய் டிவி பார்ப்பதால் அவர்களுக்கு எதுவுமே புதிதாய் அதிசயமாய் தெரிவதில்லை. அப்போதெல்லாம் டிவி பார்ப்பது என்பது விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு போவது போல சுவாரஸ்யமாக விஷயம், எப்போதாவது தான் பார்க்க முடியும்.

எந்நேரமும் நகைச்சுவை, பாடல்கள் என்று தனியாக பார்க்க சேனல்கள் கிடையாது எதுவாக இருந்தாலும் ஒரே தூர்தர்ஷனில் தான் பார்த்தாக வேண்டும்.வெள்ளி கிழமை ஒலியும் ஒளியும் பார்பதற்காகவே எத்தனையோ நாட்கள் விளையாட்டை நிறுத்தி, வீட்டு பாடங்களை முன்னவே எழுதி தயாராய் இருந்திருக்கிறோம், அப்படி தயாராய் காத்திருக்கும் போதிலும் திடீர் என்று தடங்கலுக்கு வருந்திகிறோம் என்று பல நிறங்கள் கொண்ட பலகை வரும் போது சில நாட்கள் அழுகை கூட வந்ததுண்டு, இதையும் மீறி நல்ல பாடல்கள் போடும் போது தொலைக்காட்சி சரியாய் தெரியாமல் புள்ளியடிக்கும், அதை சரி செய்ய அப்பாவை மொட்டை மாடிக்கு அனுப்பி கீழ் இருந்து இப்போ பரவாஇல்லை என்று கத்தி அப்பாவை கீழே அழைத்து முடிப்பதற்குள் பாடல் முடிந்திருக்கும்.

சனி கிழமை வந்தாலே இன்று இரவு என்ன படம் போடுவானோ என்ற பரபரப்பிலேயே அழகாய் தொடங்கும் காலைகள், அவன் சலித்து போகும் அளவுக்கு விளம்பரங்களை போட்டு படத்தை முடிக்கும் போது கண் நிறைய தூக்கத்துடன் இரவு சுமார் ஒரு மணி ஆகி இருந்தாலும் அடுத்த சனி கிழமை அதெல்லாம் மறந்து போய் இருக்கும். அப்படி நள்ளிரவு வரை சிரித்து சிரித்து ரசித்த படங்கள் இன்று பார்த்தாலும் அலுக்காத 'தில்லு முல்லு', 'சிம்லா ஸ்பெஷல்', 'திருவிளையாடல்' இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ஞாயிறு காலை பத்து மணிக்கு போடும் மகாபாரதம் பார்க்க, எதிர் வீட்டில் இருக்கும் என் ஆச்சி வருவார்கள், எப்போதுமே எதிரில் இருந்தாலும் அதென்னமோ மகாபாரதம் பார்க்கும் போது தான் எல்லாரும் அதிக நேரம் எங்கள் வீட்டில் இருப்பார்கள். அனேக ஞாயிறு காலைகளில் அடை தோசை தான் இருக்கும், பட்டாசலில் மண்ணெண்ணெய் அடுப்பு வைத்து ஆச்சி தோசை ஊத்தி கொடுக்க நாங்கள் மகாபாரதம் பார்த்த படியே சாப்பிடுவோம். எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து அப்படி சாப்பிடுவதே பெரிய கொண்டாட்டமாய் தெரியும் எங்களுக்கு.

இது இல்லாமல் காலை எழுந்த உடனேயே அநேகமாய் போட பட்டிருக்கும் ரேடியோக்கள் வேறு நம்மை இன்னும் குஷி படுத்தும். நெல்லை வானொலியில் புது சினிமா பாடல்களை அரிதாய் தான் போடுவார்கள். புது பாடல்களை கேட்பதெனில் கண்டிப்பாய் சிலோனில் கேட்டு தான் அறிமுகம் எங்களுக்கெல்லாம். புது பாடல்களை முதலில் கேட்கும் போது அதற்கான காட்சிகள் இப்படி தான் இருக்கும் என்று ஒரு கற்பனை வரும், படம் போய் பார்த்த உடன் சில நேரம் அதைவிட நன்றாகவோ அல்லது கற்பனைக்கும் பாடல் காட்சிகளுக்கும் சம்மந்தமே இல்லாமலோ இருப்பது கூட சுவாரஸ்யமாய் தான் இருக்கும். அப்படி நிறைய கற்பனை செய்து ஏமாந்து போன பாடல் நிறைய உண்டு. பாடல்களுக்கு இடையில் அதை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை ஊர் பெயருடன் சொல்வார்கள், அந்த அறிவிப்பாளர்களின் உச்சரிப்பில் பெயர்பட்டியல் கூட கேட்பதற்கு அருமையாய் தான் இருக்கும்.

நகைச்சுவை காட்சிகள் சிலவற்றை ஒலிபரப்புவார்கள், வெறும் வசனம் தான் எனினும் அந்த நாட்களின் அதை கேட்பதற்கே அப்படி அலைபாய்வோம். அதிலும் தங்கவேலுவின் 'கல்யாண பரிசு' மன்னாரன் கம்பெனி நகைச்சுவையும், திருவிளையாடலில் நாகேஷ்-சிவாஜி உரையாடலும் சிலோனில் தான் முதல் முதல் கேட்டிருக்கிறேன், அதற்கு பின் பார்த்த போது இன்னும் சுவாரஸ்யம் கூடியதே தவிர குறையவில்லை. சனி கிழமை காலைகளில் வைரமுத்து அவரின் கவிதை தொகுப்பில் இருந்து எதாவது ஒரு கவிதையை வாசிப்பார். என் பள்ளி நாட்களில் எல்லாம் எனக்கு கவிஞர் எனின் பெரிய அறிஞர், அது வைரமுத்து தான், எனவே அவர் வாசித்து முடித்தவுடன் தான் நான் பள்ளி கிளம்புவேன்.

சிலோனில் போடும் விளம்பரங்கள் வேறு நகைச்சுவையாய் இருக்கும், சிங்கம் மார்க் குடைக்கு, 'அண்ணா நடை சின்ன இடை சிங்கம் மார்க் குடை ஆஹா சிங்கம் மார்க் குடை' என்று பாடும் போது காலை பரபரப்பிலும் சிறுப்பு பொத்து கொண்டு தான் வரும். இப்போதெல்லாம் சிலோனே ரேடியோவில் கூட அந்த நாட்களில் அறிவித்தவர்களை போல அற்புதமான அறிவிப்பாளர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த பழைய உற்சாகம் நிச்சயமாய் வரபோவதில்லை. மீண்டும் அந்த பழைய நாட்களுக்கு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

Tamilish

நீ ஒரு காதல் சங்கீதம்....



எந்த சூழலில் கேட்டாலும் மனதிற்குள் ஒரு இனிய காதலின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த பாடல் என் மனதிற்கு எப்போதுமே நெருக்கமானதாய் இருந்திருக்கிறது.நாயகன் படத்தில் இளையராஜாவின் இசையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் அற்புதமாய் படமாக்கப்பட்ட பாடல் இது. படம் முழுவதிலும் காதல் காட்சிகளால் நிறைந்து வழியாமல் ஒரு பாடலில் மட்டுமே நிறைவான காதலை காட்டி இருப்பதும் இந்த பாடல் மேல் எனக்கு ஒரு தனி பிரியம் படர காரணமாய்இருக்கலாம்.

வயலினில் ஆரோகணித்துத தொடங்கும் பாடலின் முதல் வரியிலேயே காதலாய் மலரும் ஒரு அற்புதமான சங்கீதம் இருப்பின் அது நீ தான் என சொல்லும் கவிஞரை வியக்கும் போதே, அடுத்த வரியிலேயே அந்த இசைக்கு வார்த்தைகளை போட்டு பாடி விட்டால் அது இன்னும் தெய்வீகமாய் அமைந்து விடும் என்று சாதாரண வரிகளில் கூட அற்புதமான விஷயங்களை சொல்லி விட முடிகிறதே என்று என்னை எண்ண வைத்த பல்லவி இது.சரணத்திலும் கடலலைகளை இசை மகள் மீட்டும் வீணையின் இனிய ஸ்வரங்களாய் உருவகிக்கும் போது தலைவனுக்கு காதல் எவ்வளவு இனிமையான உணர்வை தருகிறது என்று நம்மாலும் உணர முடியும்.

இந்த பாடல் நிகழும் இடம் மும்பையில் காட்சியாக்க பட்டிருக்கும், இந்த பாடலின் காட்சிகளை பார்க்காமல் இருந்தால் கூட இது வடஇந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையை தழுவி செல்வதால் இது எங்கோ வடக்கில் நிகழும் காதலாகவே மனதில் பதியும், பாடல் முழுவதிலும் விரவி செல்லும் மெல்லிய தபல் ஓசை இதை நமக்கு உணர்த்தும்.ராகங்களை பற்றிய பெரிய ஞானம் இல்லாவிடிலும் இது தேஷ் ராகத்தில் அமைந்த பாடல் என்று அறிந்திருக்கிறேன். மனோ சித்ரா இருவரின் குரலும் இன்னும் அருமையாய் இழைந்து ராஜாவின் இசையில் மேலும் உருகி வழியும் மனதை நெகிழ்த்தும். சரணங்களின் நடுவில் ஒலிக்கும் புல்லாங்குழலின் மெல்லிய இழைவுடன் வீணையும் சேர்ந்து இந்த பாடலின் இசைக்கு சுவைகூட்டும்.

காதலின் மென்மையை உணர்த்தும் படி பாடலில் வந்து போகும் புறாக்கள், மழை, கடற்கரை, இரவு வெளிச்சத்தில் இந்திய நுழைவாயில், மழை ஒழுகும் வீட்டில் மனைவியை அணைக்கும் கணவன் என இவை யாவும் மேனகேடாமலே வெகு எதார்த்தமாய் காட்சியாக்க பட்டு இருப்பதற்கு இயக்குனர் மணியை பாராட்ட வேண்டும், எனக்கு தெரிந்து கனவிலோ நிஜதிலோ ஆடாமல் வெகு எதார்த்தமாய் படமாக்க பட்ட பாடல்கள் வெகு குறைவு அவற்றில் இந்த பாடலுக்கு தனி இடம் உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது.நிலவொளியில் கால்களில் அலைகள் விளையாட அமர்ந்து இந்த பாடலை கேட்க ஆசை பட்டிருக்கிறேன்,
இன்று வரை அது நிகழவில்லை எனினும் கூட்டத்துடன் நசுங்கி வழியும் பேருந்து பயணங்களில் கூட மனதில் கடற்கரை காற்றின் சிலுசிலுப்பை ஏற்படுத்திவிட முடிகிறது இந்த பாடலால்.

எனக்குள் நீ....


என்
புன்னகை,
சில கண்ணீர் துளிகள்,
சின்ன இதழ் ஒற்றல்கள்,
நேச அணைப்புகள்,
எதிலுமே கரையாத
உன் மனது,
ஓர் அதிகாலை கனவில்
நீ ஸ்பரிசித்த அந்த
பிஞ்சு கால்களின் மென்மையில்
நெகிழ்ந்து போகிறது
நெகிழ்ந்த உன் மனதை
அள்ளி எடுத்து பருகி கொள்கிறேன்
நாளை எனக்குள் ஜனிக்கும்
அந்த ஈரமனம்
பிஞ்சு கைகால்களுடன்.

வாசிப்பின் மனவெளி -2


வாசிப்பில் காதலையும், ரசனைகளையும் மட்டுமே கண்டு வந்த என்னை ரத்தம், வேர்வை, கண்ணீர், உழைப்பு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வைத்த புத்தகம் 'தாய்'. உலகிலேயே திகமா மொழிகளில் மொழிபெயர்க்க பட்ட புத்தகம் தாய் என்று ஒரு நண்பர் சொன்னதை நினைவு. ரஷ்ய நாவலான் தாய்(மக்ஸ்சிம் கார்கி), என் ண்பர்கள் பலவாறு என்னை ஊக்க படுத்தி எங்கள் ஊர் நூலகத்திலே அது கிடைத்த போது எனக்கு மகிழ்ச்சியில் குதித்து விடலாம் போல இருந்தது, அதில் என்ன இருந்தது என்பதை விட இதை நாம் படிக்க போகிறோம் என்பதே சிலிர்பை இருந்தது. அதிலும் அது ஒரு கம்முனிச நாவல் என்று முன்பே அறிந்து வைத்திருந்ததால் நான் என்னவோ பெரிய லெனினின் தங்கை போல ஒரு உணர்வு கிளர்ந்தது(இவ்வளவும் அந்த புத்தகத்தை படிக்கும் முன் இருந்த உணர்வு).படிக்க தொடங்கிய போது, ஒரு நாயகன் நாயகி என்று(தமிழ் சினிமா போல) தொடங்காமல் தொழில்சாலை தொழிலாளர்கள் என்று இருந்தது முதலில் பெரிய ஏமாற்றமாய் தான் இருந்தது னால் தொடர்ந்து படித்த போது தான் அந்த தொழிலாளிகளின் வேதனையும் வலியும் மெல்ல மெல்ல தாக் தொடங்கியது. நாயகன் பாவேலின் தாயின் அற்புதமான தியாகம் மெய் சிலிர்க்க வைத்தது, மெல்லிய சரடாய் வரும் காதல் பெரிய விஷயமாய் தெரியவே இல்லை. என் வாசிப்பின் மற்றொரு பூங்கதவு தாழ்திறந்து கொண்டது, ஒரு புறம் பசி பட்டினி என்ற பல முகங்கள் பற்றி தெரிய நேர்ந்தாலும் மறுபுறம் திறந்த வானமும் எனக்கு கிடைத்த் வாழ்கையும் எவ்வளவு நிம்மதியானது என்பதை உணர்த்து வாழ கற்று தந்தன இந்த நூல்கள்.

கையில் கிடைத்தவற்றை ல்லாம் படிக்க தொடங்கிய போது வங்காள எழுத்தாளர் மஹா ஸ்வேதா தேவியின் 'காட்டில் உரிமை' கையில் கிடைத்தது,அந்த அற்புதமான புதினத்தின் சிறப்பு எனக்கு தெரிந்திருக்கவில்லை,
பின்னாளில் தான் ஸ்வேதா தேவி வங்காளத்தில் மிக பெரிய புரட்சி எழுத்தாளர் என்பதே எனக்கு தெரிய நேர்ந்தது, அவரின் இந்த நூலை பற்றிய குறிப்புகளை இணையத்தில் இன்றும் கூட நான் அதிகம் பார்த்தது இல்லை(தமிழ் மொழிபெயர்ப்பை பற்றி), எனினும் அற்புதமான நூல் இது. சுதந்திரத்திற்காக போராடிய நகர வாசிகளை பற்றி மட்டுமே அறிந்திருக்கும் மக்கு அந்த நாட்களில் காட்டில் வாசித்த ஆதி வாசிகளின் நிலை பற்றி பெரிய கருத்துக்கள் இல்லை, ஆனால் அந்த புத்தகம் வாசித்த போது மிகபெரி அதிர்ச்சியாய் இருந்தது, ஆதி வாசிகள் எவ்வளவு துன்புறுத்த பட்டிருக்கிறார்கள் என்றும் அரிசி சோற்றுக்கே அவர்கள் மதம் மாற வேண்டி இருந்த அவல நிலை பற்றியும் வாசிக்க நேர்ந்தது அதில் வரும் சம்பவங்கள் எதுவுமே புனைவில்லை அவ்வளவும் நிஜம், அதை படித்து விட்டு பல இரவுகள் அழுதிருக்கிறேன். அதே போல '1084 லின் அம்மா' என்ற புத்தகமும் ஸ்வேதா தேவியின்னுடையதே அதுவும் புரட்சியாளனாய் இருந்து இறந்த தன மகனை பற்றிய தாயின் புரிதல்கள் பற்றியது, அந்த நவலில் தாய் தன முகத்தில் இருந்த கருவளையத்தை மிகவும் ரசிப்பாள் அது தன மகனுக்காய் தான் கொண்டிருந்த நேசத்தின் கடைசி மிச்சம் என்று அதை ரசித்து பார்க்கும் அந்த தாயின் நேசம் என்னை மௌனமாக்கி மனதில் சுமைஏற்றி இருக்கிறது. இந்த வகையில் ஈர்க்கபட்டு சில மொழிபெயர்ப்பு நாவல்களையும் சிறுகதை தொகுப்புக்களையும் படித்ததுண்டு. மலையாள எழுத்தாளர்களான தகழி, வைக்கம் முகமது பஷீரின் கதைகள் வெகுவாய் என்னை பாதிப்பில் ஆழ்த்தியவை.

தமிழில் சா.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' எனக்கு மனதிற்கு மிகவும் நெருங்கிய உணர்வை ஏற்படுத்திய சிறுகதை தொகுப்பு ஏனெனில் எங்கோ அந்துவான காட்டில் கஷ்ட படுபவர்களை பற்றி வாசிப்பதற்கும் நம் பக்கத்து
வீட்டில் சங்கட படுபவர்களை அறிந்து கொள்வதற்கும் வித்தாயசம் இருக்கத்தானே செய்கிறது. கோயில்பட்டியின் தீப்பட்டி தொழில்சாலையால் பாதிக்கபட்ட சிறுவர்கள் குடும்பங்கள் பற்றிய அற்புத கதை உலகம்.
அதில் வந்த அசோக வனங்கள் கதை(இந்நாளில் பூ படமாய் வெளி ந்திருகிறது) என்னை மிகவும் ஈர்த்ததுண்டு என்ன ஒரு காதல் என்று வியந்து போயிருக்கிறேன். பல ணி நேரங்கள் அந்த கதையில் என்னை பொருத்தி பார்த்து புளங்காகிதம் அடைந்திருக்கிறேன்.இப்படி எதையாவது வாசித்து விட்டு சிந்திப்பது ரசமான விஷயமாய் இருக்கும். சுந்தர சுவாமியின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய கதையாடல் சிந்தித்து மனதில் தேக்கி பார்த்து மறுபடியும் வாசிக்க அருமையாய் இருக்கும், ஒரு முறை நான் ராமேஸ்வரம் போய் திரும்பி வரும் போது 'ஜெ .ஜெ சில குறிப்புகள்' வாசித்தபடி ஊர் திரும்பினேன், ராமேஸ்வரத்து பாம்பன் பாலத்தில் ஆளை அள்ளும் காற்றும் அந்த தூரத்து பச்சியமாய் தெரியும் தீவுகளும் ஒவ்வொரு முறை அந்த நாவலை கையில் எடுக்கும் போதும் எனக்கு நினைவுக்கு வரும். கி. ராஜநாராயனையும் லா .சா.ராமாமிர்ததையும் சொல்லாமல் தீராது, கி.ராவின் 'பிஞ்சுகள்' படித்து விட்டு பல நாட்கள் பறவைகளின் முட்டைகள் சேகரிக்க எண்ணியதுண்டு, அவரின் 'கோப்பல்ல கிராமத்தில்' வரும் நாட்டார் கதைகள் அந்த நாட்களின் ராஜாக்களும் ராணிகளும் எப்படி இருந்திருப்பார்கள் என்று தாத்தா சொல்லி கேட்கும் ஒரு நிறைவை தரும். லா. சா. ராமாமிர்தம் வர்ணனைகளின் வள்ளல், சின்ன விஷயத்தை கூட எப்படி ஒரு அற்புத கண் கொண்டு பார்க்க முடியும் என்று சொல்லும் அற்புத எழுத்து அவரது, ஒரு குழந்தை தாயிடம் பசியாறி முடிந்த உடன் அதன் வாயில் எஞ்சி நிற்கும் அந்த பாலோடு அது சிரிக்கும் அழகை இரண்டு பக்கம் அவரால் மட்டுமே எழுத முடியும்(ரசிக்கும் படி).

என்னுடைய பள்ளி நாட்கள் முடிந்து நான் கல்லூரியில் சேர தயாராய் இருந்த அற்புத நாட்கள் அவை. எவ்வளவு பெரிய புத்தகமாய் இருப்பினும் 2 நாட்களுக்குள் முடித்து விட்டு, மாலைகளில் கிருஷ்ணன் கோயில் திறப்பு மணியோசை கேட்டபடி புத்தகம் துளாவும் அந்த நாட்களில் நான் என்னை பெரிய அறிவு ஜீவியாய் நினைத்து கொள்வேன், நாவல்கள் தந்த மனவெளி ஒரு புறம் இருக்க கணையாழியில் நான் வாசித்து எனக்குபுரியமலே இருந்த கவிதைகள் திடீர் என்று ஒரு மாய தருணத்தில் புரிய தொடங்கிய பொது என் வாசிப்பின் மற்றொரு வாசல் திறந்து கொண்டது, இந்த முறை திறந்த வாசலின் வழி ஜிலு ஜிலு என குழுமையான காற்றும் வீசியதெனில் கதவை மூட தோன்றுமா என்ன ?

வாசிப்பின் சுகந்தம் தொடரும்...

வாசிப்பின் மனவெளி-1



ஒரு இளங்காலையின் அழகை, மென் காற்றின் சுகத்தை, வசந்த கால மாலையில் பறவைகளின் இன்பகூச்சலை, நதியின் சலசலப்பை நான் நேரடியாக உணர்ந்ததை விட புத்தகத்தில் அதை வாசித்த பின் உணர்த்த போது அவை இன்னும் அழகான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தியதுண்டு.அவ்வளவு நாள் நான் பார்த்த அதே வானத்தை, மலையை, மழையை வேறு ஒரு மந்திர கண்ணாடியின் வழி பார்க்கும் ஒரு அற்புத உணர்வை எனக்கு தந்தது வாசிப்பு.

பதின்மங்களின் தொடக்கத்திலேயே எனக்கு வாசிப்பில் ஒரு ஈடுபாடு வந்து விட்டிருந்தது,முதலில் ஆங்கிலத்தில் தொடங்கிய என் வாசிப்பை பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் தமிழின் பக்கம் இழுத்து வந்தன. கற்பனையிலேயே இவ்வளவு பெரிய அற்புதத்தை எழுத முடியுமா என பிரமித்த நான் பிற்பாடு நாயகன் சுரங்க பாதையின் இருட்டில் பதுங்கினால் நானும் அவன் நிழலாய் திரிந்தேன், நாயகி கடலில் படகோட்டினால் நானும் அவளுடன் சேர்ந்து துடுப்பு வலித்தேன், அவள் வெட்கப்படும் போது எனக்கும் கன்னங்கள் சூடானது. கற்பனை செய்து கொண்டே படிக்க வசமாய் சித்திரங்கள் வேறு இருந்ததால் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும் அந்த கற்பனை வெளி அந்த வயதில் பெரிய பிரமிப்பிற்குரியதாய் இருந்தது, இன்றும் கூட அந்த பிரமிப்பு தீராமல் தான் இருக்கிறது, இதற்கு இடமாறு தோற்ற பிழை கூட காரணமாய் இருக்கலாம்.

இடமாறு தோற்ற பிழை பற்றி சொல்வதெனில்(விவரமாக அறிய இங்கேசொடுக்கலாம் )ஒரு மழை நாளை நான் ஜன்னலருகே ராஜாவின் இசையோடும், சூடான தேநீரோடும் கழிக்கிறேன் அந்த நாள் என்னுள் ஆழமாய் பதிந்து போகிறது, மற்றொரு நாளும் மழை பொழிகிறது அன்று நன்றாக நனைந்தும் விடுகிறேன் எனினும் என் மனதில் முன்பொருமுறை மழையை நான் ரசித்ததே அற்புதமான மழை நாளாய் நினைவில் இருப்பின் அது தான் இடமாறுத்தோற்றபிழை, இது மறுபடியும் நாம் வாசித்த புத்தகத்தையே மீள் வாசிப்பு செய்யும் போது ஏற்படும் நமக்கு. இதை போன்ற தோற்ற பிழைகளில் இருந்து தப்பி மீள் வாசிப்புக்கு போவதெனில் நிறைய அற்புதமான விஷயங்களை நாம் கண்டுகொள்ள இயலும். இதை பொன்னியின் செல்வனில் ஒரு பகுதியிலே நான் நன்றாக உணர்தேன். அதில் வானதி குந்தவைடம்(இரு முக்கியமான கதாபத்திரங்கள் -தலைவிகள்) பேசும் தருணங்களை நான் அவ்வளவு சிறப்பாய் வாசித்தது இல்லை, ஆனால் ஒரு முறை ஆழமாய் வாசித்த போது, வானதி சொல்கிறாள் 'அவர் சூரியனை போல நானோ பனித்துளி போல பனித்துளி சூரியன் மேல் ஆசைபடலாமா? அது தான் நடக்குமா என்கிறாள், அதற்கு குந்தவை சொல்கிறாள் பனித்துளியாய் இருந்தாலும் அந்த சூரியனையே உனக்குள் பதுக்கி வைக்கிறாயே என்று, அதற்கு வானதியும் ஆனால் கடைசியில் பனித்துளி காணாமல் போகிறதே என்று சொல்லி வருந்தும் போது குந்தவை சொல்கிறாள் பனித்துளியை அனைவரும் பார்ப்பது சூரியனுக்கு பொறாமையாய் இருப்பதால் அது பனித்துளியை தன்னுள் ஒழித்து வைத்து இரவானதும் மறுபடியும் வெளியில் விடுகிறது' என்றும் தொடரும் அந்த விளக்கம் எனக்கு இதுவரை நான் யோசித்திராத ஒரு வெளியை எனக்கு அறிமுகப்படுத்தியது.

இதற்கு பின் நான் நா . பார்த்தசாரதியின் படைப்புக்களை வாசிக்க தொடங்கினேன், அவை என்னை சரித்திர உலகத்தில் இருந்து இழுத்து வந்து எதார்த்த மனிதர்கள் நடுவில் விட்டு விட்டன, எனினும் அற்புதமான மலையடிவாரத்தின் குழுமையையும், அப்படி இதமான குளிரில் அன்பு நெஞ்சங்களின் பவித்ரமான காதலையும் நினைவு படுத்தும் அவரின் படைப்புகளான குறிஞ்சி மலர்கள், பொன் விலங்கு, சத்திய வெள்ளம் எல்லாம் படிக்க படிக்க திகட்டாதவை. இப்படி கற்பனைகளில் கிடந்த என்னை புரட்சிகரமான எழுத்துக்களுக்கு இட்டு சென்ற நாவல் தாய். முற்றிலும் புதிய பரிமாணமாய் வாசிப்பு மறுபடியும் என் எண்ணங்களை திசை மாற்றியது.

வாசிப்பின் இசை தொடரும்....

காதலால் விழுந்தேன்-1


காதலால் விழுந்தேன் என்ற பதிவின் தொடர்ச்சியான இந்த பதிவில் எப்படி பட்ட ஒரு திகிலான சுழலில் நான் சிக்க நேர்ந்தது என்பதை விவரிக்க எண்ணுகிறேன். நான் அந்த மருத்துவரிடம் பேசியபடியே(அவரின் பெயர் சுதாகர் என்று ஒரு நினைவு) நடந்தபோது நாங்கள் அந்த பெண் இருந்த இடத்தை நெருங்கி விட்டோம், ஆனால் அந்த இடம் வந்ததுமே அவர் அய்யய்யோ அங்கே ஒரு சுமோ நிற்கிறதே அதில் நிற்கும் ஆட்கள் அவள் உறவினர்கள்,என்னை ஏற்கனவே குத்தியவர்கள் அதனால் தனியே போய் விடாதீர்கள் உங்கள் மேல் அசிட் ஊத்தி விடுவார்கள் என்னுடனே வாருகள் என்றார் எனக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை நான் திரும்பி அந்த காரில் இருந்த மனிதர்களை பார்த்தேன் கையில் பெரிய கம்புகளுடன் இருந்தார்கள் பயத்தில் கை கால்கள் சில்லிட்டு விட்டன இப்படி ஒரு உதவி நமக்கு தேவையா என்று முழித்து கொண்டு நின்ற போது என் சகோதரர் ஆகி விட்ட மருத்துவர் வாருங்கள் ஓடி விடலாம் இங்கேயே நின்றால் அவர்கள் என்னை நிச்சயம் அடிக்க வருவார்கள் அவர்கள் பார்க்கும் முன் நாம் ஓடி விடலாம் பிறகு வந்து நானே என் காதலியை அழைத்து போயகொள்கிறேன் இப்போது உங்களை காப்பற்றி விடுகிறேன் என்று சொன்னார், மனிதர் என்னை காப்பற்றுகிறாரா அல்லது என்னை சிக்கலில் மாட்டி விட்டாரா என்பது அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்.

பயத்தில் எனக்கு அழுகை வரும் போல இருந்தது எனினும் அதற்கெல்லாம் நேரம் இல்லாததால் அவருடன் ஓட தொடங்கினேன், நாங்கள் இருவரும் முள் காடு, வயல் வெளிகள் என்று ஒவ்வொரு இடமாய் ஓடி கொண்டிருந்தோம், சுமார் மூன்று மணி நேரம் ஓட்டம், தூரத்தில் அந்த சுமோ துரத்தி கொண்டே வந்தது எனக்கு பயம் ,எரிச்சல், கோவம் என்று கலவையான உணர்வுகள். 'நீங்கள் காதலித்தால் நீங்கள் இருவரும் செத்து தொலைக்கலாமே அநியாயமாய் என்னையும் இதில் எதற்காய் இழுக்க வேண்டும் என்று, இப்படி ஒரு காதல் உங்களுக்கு தேவையா என்றெல்லாம் திட்டி கொண்டே ஓடினேன்(அப்போதும் என்னுடைய ஒரு கொயர் நோட்டையும் என் பர்சையும் விடவில்லை). தண்ணீர் குடிக்க ஒரு வீட்டில் ஒதுங்கிய போது அவர்கள் நாங்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்து விட்டார்கள் எனக்கு எரிச்சல் தாளவில்லை. இதற்குள் நாங்கள் திருநெல்வேலியை விட்டு 5, 6 கிலோமீட்டர்கள் தள்ளி ஓடி வந்து விட்டோம். எனக்கு திடீர் என்று என்னுடன் ஓடி வந்து கொண்டிருந்த மருத்துவரின் பேரிலேயே சந்தேகம் வந்தது ஒரு வேளை இதெல்லாம் என்னை கடத்துவதற்கான சதியோ என்று ஆனால் அதற்கான காரணங்கள் இல்லை, அவரே என்னை இதில் இழுத்து விட்டுவிட்டதர்கான குற்ற உணர்வில் இருந்தார்.

மாலையானால் என்னை என் சித்தப்பா வந்து அழைத்து போக வருவதை கூறி இருந்தார்கள் எனக்கு அது வேறு பயம் எப்படி இவர்களிடம் இருந்து தப்பி அங்கே போவது என்று. ஒரு இடத்தில ஒளிந்து அமர்ந்திருந்த போது விடமால் ஷஷ்டி கவசம் சொல்லி இறைவா எப்படியாவது எங்களை காபற்றிவிடு என்று வேண்டினேன், இதற்குள் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அவங்க அங்க தான் இருகாங்க என்று கத்தினான் உடனே எனக்குள் ஒரு அதித சக்தி புகுந்தது போல வேகமாய் நான் அந்த மருத்துவர் என்னை பற்றி இருந்த கையை உதறி விட்டு தூரத்தில் தெரிந்த நெடுஞ்சாலையை நோக்கி ஓடினேன், சிஸ்டர் சிஸ்டர் வேண்டாம் அவர்கள் வருகிறார்கள் என்று சொன்னபடியே அவரும் என் பின்னால் வந்தார் நான் வேகமாய் ஓடி அந்த நெடுஞ்சாலையில் வந்த ஒரு பேருந்தை நிறுத்தினேன். உடனே அதுவும் நின்றது, அதில் ஏறி அமர்ந்தேன் சுதாகரும் என்னுடன் ஏறி வந்து என்ன சிஸ்டர் இப்படி செஞ்சிடீங்க பின்னால பாருங்க சுமோ வந்திட்டு இருக்கு என்று சொன்னார், நான் உடனே தயவு செஞ்சு என்னை விட்டு விடுங்கள் நான் போய் கொள்கிறேன் நீங்கள் உங்களை காப்பற்றி கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பேருந்து எங்கே போகிறது என்று கேட்டேன். அப்போது தான் பேருந்து தாழயுத்து என்ற இடத்திற்கு செல்வது தெரிந்தது அங்கே போய் இறங்கி வேறு ஒரு பேருந்தில் தான் மறுபடி திருநெல்வேலி வரவேண்டும், எனினும் நான் பயணசீட்டு வாங்கி விட்டேன், மூன்று நிறுத்தங்கள் வரும் என்று சொன்னார்கள். எனக்கு பயமாய் இருந்தது பின்னால் வரும் சுமோவை நினைத்தும் அந்த மருத்துவரின் நிலைமை குறித்தும், நான் தப்பி விடுவேன் என்ற எண்ணம் எனக்கு ஏனோ வந்து விட்டிருந்தது.

அடுத்த நிறுத்தம் வந்த உடன் அங்கே நிறுத்தத்தில் நின்ற பெண் ஒருத்தி மருத்துவரை பார்த்து இவன் தான் இங்கே தான் நிற்கிறான் என்று கூவினாள் உடனே இவர் பேருந்தில் இருந்து இறங்கி தெருவுக்குள் வேகமாய் ஓட ஆரம்பித்தார் அத்துடன் அவரை சில ஆண்கள் ஆயுதங்களுடன் துரத்தினார்கள் பேருந்து கிளம்பி விட்டது என்னால் நம்ப முடியவில்லை நான் இந்த பிரச்சனையில் இருந்து தப்பி விட்டுருந்தேன், ஆனால் என் பதட்டம் அடங்கவில்லை, பாவம் அந்த மருத்துவருக்கு என்ன ஆயிற்றோ என்ற வருத்தம் இருந்தது , சிஸ்டர் சிஸ்டர் என்று அவர் ஆழைதது நினைவு வந்து கொண்டே இருதது. பிறகு இன்னொரு பேருந்தை பிடித்து நல்ல பிள்ளை போல என் பயிற்சி இடத்திற்கு போய் அமர்ந்திருந்தேன் சித்தப்பா வந்து அழைத்த போது எதுவுமே அவரிடம் சொல் வில்லை , மறுநாள் செய்தி தாளை நடுக்கத்துடன் பார்த்தேன் ஏதேனும் மரண சம்பவங்கள் இருக்கிறதா என்று எதுவும் இல்லை ஒரு புறம் நிம்மதியும் மறுபுறம் வருத்தமுமாய் இருந்தது. அந்த மருத்துவரிடம் ஓடும் போது சொல்லி இருந்தேன் இப்படி ஆட்களை பலி கொடுக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது காதலில் என்று அவர் சொன்னார் காதலிபீர்கள் நீங்கள் அப்போது புரியும் உங்களுக்கு என்று அதுவும் நடந்து தான் விட்டது.

அந்த மருத்துவருக்கு அந்த பெண்ணுடனே கல்யாணம் நடந்திருக்குமா அவர்களுக்கு குழந்தைகள் இருக்குமா, அலல்து அவர் உயிருடன் இருக்கிறாரா.
அவ்வளவு நேரம் ஓடிய போது அவரிடம் கேட்ட தகவல் படி அவரின் காதலி வெகு அழகாய் இருப்பாளாம் அவளை ஒரு முறை கூட பார்க்க முடியாமல் போனோமே, அந்த காதல் என்னவாகி இருக்கும், இவர்களை எதிர்க்கும் இந்த ஜாதி மதம் பார்க்கும் சமுதாயம் எப்போது திருந்தும் என்றெல்லாம் எண்ணியபடி இருப்பேன் எனினும் எனக்கு ஆபத்து வந்த போது நானும் அந்த காதலை எதிர்க்க தானே செய்தேன் என்ற குற்ற உணர்வுடன், உடனே நானே தனக்கு மிஞ்சி தானே தானமும் தர்மமும் என்றும் சொல்லிகொள்வேன்.

காதலால் விழுந்தேன்



எனக்கு நிகழ்ந்த ஒரு வித்தியாசமான அனுபவம் இது, இதை பற்றி நினைத்து பார்க்கும் போது இன்றும் இது நமக்கு தான் நிகழ்ந்ததா என்று நம்ப முடியாத ஒரு தன்மை என்னுள் படரும். கேட்க்கும் எவரும் இதுவரை நம்பியதில்லை, இப்படி உங்களுக்கு நடந்திருக்க வாய்ப்பே இல்லையே என்று தான் சொல்வார்கள், காதல் மனிதனை படுத்தும் பாட்டில் நான் மட்டும் என்ன விதி விலக்கா.

அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன், என் கல்லூரியில் விடுமுறை ஆரம்பித்து இருந்தது, அந்த நாட்களிலும் எங்களை எதாவது ஒரு தொழில் பயிற்சி செய்தது சான்றிதழுடன் தான் நீங்கள் வர வேண்டும் என்று நிபந்தனை இட்டிருந்தார்கள்(படுத்தினார்கள்) , நானும் அதற்காய் திருநெல்வேலியில் இருந்த என் சித்தி வீட்டில் தங்கி பயிற்சிக்கு சென்று வந்தேன், அன்று ஒரு சனி கிழமை என்னுடைய பயிற்சியின் இறுதி நாள் , சில மணி நேரம் இருந்தாலே போதும் அன்று அதனால் மதியம் இரண்டு மணி போல கிளம்பி ஒரு பேருந்தில் (10 நிமிஷங்கள் தான்) ஏறி என் பயிற்சி அலுவலகம் இருக்கும் நெல்லை சந்திப்புக்கு சென்றேன்.

இறங்கிய உடனேயே என்னை சிஸ்டர் என்று ஒருவர் அழைத்தார், நின்று என்னை தான என்று திரும்பி பார்த்தேன்(இது தான் மிகபெரிய தப்பு), ஒரு அடையாள அட்டையுடன் என்னிடம் வந்தார்.வந்தவர் சிஸ்டர் நான் ஒரு அரசு மருத்துவன், எனக்கு ஒரு அவசர உதவி செய்ய முடியுமா என்று கேட்டார், என்ன உதவி என்று கேட்டேன். அவர் அதற்கு என் தோழியுடன் நான் சினிமாவிற்கு வந்தேன் அவள் ஒரு முஸ்லிம் அவளுடைய உறவினர்கள் இங்கே வந்திருப்பதால் என்னுடன் வந்தால் அவர்கள் அவளை திட்டுவார்கள் ஆகையால் நீங்கள் என்னுடன் அவள் இருக்கும் இடத்திற்கு வந்து
அவளை இதே இடத்தில விட்டு விடுங்கள் அவளே போய் விடுவாள் என்று சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை முதல், இது நமக்கு தேவை இல்லாத தொல்லை என்று தோன்றியது எனினும் பயம் வரவில்லை. எதற்காக இப்படி எல்லாம் சினிமாவிற்கு வந்து மாட்டி கொள்ள வேண்டும் என்று கேட்டு விட்டு எங்கே இருகிறார்கள் என்று கேட்டேன். அவர் உடனே இதோ இங்கே தான் அருகில் என்று எனக்கு தெரிந்த ஒரு இடத்தை சொன்னார்.

சரி என்று அவருடன் சென்றேன்(இதை தான் தொல்லையை தோளில் தூக்கி போட்டு கொள்வது என்பது), போகிற வழியில் தான் அந்த பெண் இவரின் காதலி என்பதே எனக்கு புரிந்தது (என் வெள்ளந்தியான மனசுக்கு நட்பை காதல்னு தப்பாய் பார்க்க கூடாது என்று தடை வேறு போட்டு வைத்திருந்தேன்). அதுவும் அந்த காதல் வெகு சிக்கலான ஒரு கதையாய் போய் கொண்டிருப்பதை அந்த மருத்துவர் என்னிடம் சொன்னார். அவருடைய அப்பா இதற்காய் தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த பெண்ணை அவர்கள் வீட்டில் கொடுமை படுத்தி அவள் மாமாவிற்கே கட்டி வைக்க முயல்வதாகவும், இதை எதிர்த்து இவர் அவளை கூட்டி கொண்டு ஓட அதனால் கத்தி குத்து வாங்கிய காயத்தை எனக்கு காட்டினர். அப்போது தான் நான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறேன் என்ற பயம் எனக்கு வந்தது, உடனே என்னை தயவு செய்தது விட்டு விடுங்கள் நான் போய் விடுகிறேன் நீங்களே உங்கள் காதலியை பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னேன், அவர் அதற்கு இல்லை சிஸ்டர் எனக்காக தயை கூர்ந்து அவளை (பதிவாளர் அலுவலகம் இருக்கும் இடத்தை சொல்லி) அங்கே மட்டும் கொண்டு விட்டு விட்டு சென்று விடுங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னார. எனக்கு பயம் ஒரு புறம் இருந்தாலும் அப்போது தான் பூவே உனக்காக படம் வந்த புதிது, அதனால் நாமும் காதலை சேர்த்து வைப்போமே என்ற எண்ணத்தில் சரி என்று விட்டேன். இதற்கு பின் தான் கில்லி படத்தில் வருவதை போன்ற பல சுவாரஸ்யமான காட்சிகள் எல்லாம் வந்தது.