பசங்க



அஞ்சலி, அழகனுக்கு அப்புறம் குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் பசங்க ஒரு நல்ல படமாக இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல தமிழை கேட்க முடிந்த திருப்தி ஏற்பட்டது இந்த படத்தில்.பேருந்தில் இருந்து எட்டி பார்க்கும் போது தென்படும் காட்சிகள் போல வெகு எதார்த்தமாக பயணிக்கிறது படம் .ஜீவா, அன்பு என்ற இரு பொடிசுகளுக்கு இடையில் ஏற்படும் மோதல்களே கதை, இடையில் மெல்லிய சரடாய் இனிக்கிறது மீனாட்சி சுந்தரம்-சோப்பிக்கண்ணு காதல்.இயக்குனர் பாண்டியராஜை ஒரு நல்ல சினிமா தந்தற்காக பாராட்ட வேண்டும்.

ஜீவா, பக்கடா, குட்டிமணி ஊரிலும் பள்ளியிலும் பல குறும்புகள் செய்து திரியும் வாண்டுகள், இவர்களுக்கு புதிதாய் பள்ளியில் அவர்கள் வகுப்பில் சேரும் அன்புவை பிடிக்கவில்லை. அன்புவின் கட்சியில் அப்பத்தாவும், மனோன்மணியும்(ஜீவாவின் அத்தை பெண்) சேர்கிறார்கள். மொத்த பள்ளி காட்சிகளையும் அர்த்தமுள்ளதாக ஆக்குவது சொக்கலிங்கம் வாத்தியாரின் இயல்பான நடிப்பு, இவர் ஜீவாவின் தந்தை எனினும் பாரபட்சம் பார்க்காமல் நல்லதை பாராட்டும் குணம் உள்ளவர். தன்னுடைய நிறை குறைகளை கேட்டு மாணவர்களை தனக்காக கடிதம் எழுத்த சொல்வதும், ஜீவா-அன்பு கட்டி புரண்டு சண்டை போடுவதை மனோன்மணி சொல்லும் போது வெகு இயல்பாய் அவர்களை இங்கு வரச்சொல் என்று சொல்வதுமே இவர் கதாபாத்திரத்தை இயல்பாக காட்டும் காட்சிகள். சொக்கன் வாத்தியார் போல நாம் படித்த பள்ளிகளில் கூட வாத்தியார்கள் கண்டிப்பாக இருந்திருப்பார்கள், அவர் நினைவுபடுத்திய சொக்கன் வாத்தியாரின் நடிப்பு அற்புதம்.



பிரேம்குமாரின் ஒளிப்பதிவில் மழையும், குளங்களும், கிராமத்து பள்ளிக்கூடமும் பசுமையாகவும் அழகாகவும் காட்டப்பட்டு இருக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன் இசையில் பின்னணி இசையும் இரண்டு பாடல்களும் அருமையாய் நம்மை வருடி குடுக்கிறது. முக்கியமாக அன்புவின் அம்மாவும் அப்பாவும் குழந்தைகளுக்காக தங்கள் சண்டைகளை விட்டு சமாதானம் ஆகும் இடத்தில பின்னணி இசை மட்டுமே பிரத்யேகமாக நம்மை ஆக்ரமிக்கிறது. மேலும் நம் நியாபக அடுக்குகளில் ஒளிந்திருந்த இளையராஜாவின் பல அரிய இசை துணுக்குகள் ரிங் டோன்களாக வலம் வருவது மனசுக்கு மகிழ்வை தருகிறது, இதற்காகவும் நாம் ஜேம்ஸ் வசந்தனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.


ஜீவாவின் அக்காவாக வரும் சோப்பிக்கண்ணுவும் அன்புவின் சித்தப்பாவாக வரும் மீனாக்ஷி சுந்தரமும் காதலிக்கிறார்கள், வித்யாசமான பல ரிங் டோனில் இருந்து இவர்களின் உரையாடல் தொடங்குகிறது. சோப்பிக்கண்ணு தன காதலை தெரிய படுத்தும் போது வாழ்த்துக்கள் என்று சொல்லி வெட்கப்படும் மீனாக்ஷி சுந்தரம் நம் மனதில் பதிகிறார். இவர்களின் காதலை பெற்றோர்கள் எதார்த்தமாக எடுத்து கொண்டு சம்மதிப்பது கூட வெகு இயல்பாகவே தெரிகிறது.


சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், குழந்தைகளின் எதிரில் சண்டை போடும் பெற்றோரால் பாதிக்க படும் குழந்தைகளின் மனநிலை, அப்துல் கலாமின் கனவு காணுங்கள் தத்துவம், சகோதர பாசம்(அன்புவிற்கும் அவன் தங்கை தெய்வக்கனிக்கும் இடையில் உள்ள நெருக்கம்), பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்க்கும் அக்கறைகள் இப்படி பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

படத்தில் சிறப்பம்சமாக நான் கருதும் விஷயங்கள், நல்ல தமிழ் பெயர்களை (தெய்வக்கனி, அன்புகரசு, மனோன்மணி) படத்தில் கேட்க நேர்ந்தது. சினிமாவில் இதுவரை நாம் கேட்டிராத சில வார்த்தைகள், "நல்ல மணத்து கெடக்கு, அடி ஏக்கதவளே, யோசனை மன்சிவாண்டு தான், நிரம்ப" இப்படி இதெல்லாம் கேட்கும் போது ஒரு லகு தன்மை ஏற்படுகிறது. இந்த படத்தை பார்க்கும் யாருமே தன்னுடைய பள்ளி நாட்களை நினைத்துக்கொள்ள எதோ ஒரு பகுதி உதவும் என்றே தோன்றுகிறது. மனோன்மணி, புஜ்ஜிமா, அப்பத்தா, சொக்கன் வாத்தியார், தெய்வக்கனி, அன்புவின் அப்பா, அம்மாவாக வருவோர் இவர்கள் அனைவருமே இயல்பான நடிப்பில் மனதை கவர்கிறார்கள். என்னை திரும்ப திரும்ப அலுப்பில்லாமல் பார்க்க தூண்டும் படமாக இந்த படம் இருந்தது, தமிழ் சினிமாவில் சொல்லி கொள்ளும் அளவிற்கு எடுக்க பட்ட குழந்தைகள் படமாக இதை கருதுகிறேன், குழந்தைகள் படமாக இருப்பினும் இதில் பெரியவர்கள் கற்று கொள்ள நிறைய இருக்கிறது

2 comments:

கப்பியாம்புலியூரன் said...

adutha post eppo poduveenga madam.,thinamum unga valai poova paarthu yemaatram dhan minjudhu.,

Minnal said...

நம் ஊரைப் பற்றி கொஞ்சம், சின்ன வயசு சம்பவங்கள் கொஞ்சம் எழுதுங்களேன்
உங்களது படைப்பை எதிர்பார்க்கும்
சகோதரன்
முத்து செல்வன்