காதலால் விழுந்தேன்-1


காதலால் விழுந்தேன் என்ற பதிவின் தொடர்ச்சியான இந்த பதிவில் எப்படி பட்ட ஒரு திகிலான சுழலில் நான் சிக்க நேர்ந்தது என்பதை விவரிக்க எண்ணுகிறேன். நான் அந்த மருத்துவரிடம் பேசியபடியே(அவரின் பெயர் சுதாகர் என்று ஒரு நினைவு) நடந்தபோது நாங்கள் அந்த பெண் இருந்த இடத்தை நெருங்கி விட்டோம், ஆனால் அந்த இடம் வந்ததுமே அவர் அய்யய்யோ அங்கே ஒரு சுமோ நிற்கிறதே அதில் நிற்கும் ஆட்கள் அவள் உறவினர்கள்,என்னை ஏற்கனவே குத்தியவர்கள் அதனால் தனியே போய் விடாதீர்கள் உங்கள் மேல் அசிட் ஊத்தி விடுவார்கள் என்னுடனே வாருகள் என்றார் எனக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை நான் திரும்பி அந்த காரில் இருந்த மனிதர்களை பார்த்தேன் கையில் பெரிய கம்புகளுடன் இருந்தார்கள் பயத்தில் கை கால்கள் சில்லிட்டு விட்டன இப்படி ஒரு உதவி நமக்கு தேவையா என்று முழித்து கொண்டு நின்ற போது என் சகோதரர் ஆகி விட்ட மருத்துவர் வாருங்கள் ஓடி விடலாம் இங்கேயே நின்றால் அவர்கள் என்னை நிச்சயம் அடிக்க வருவார்கள் அவர்கள் பார்க்கும் முன் நாம் ஓடி விடலாம் பிறகு வந்து நானே என் காதலியை அழைத்து போயகொள்கிறேன் இப்போது உங்களை காப்பற்றி விடுகிறேன் என்று சொன்னார், மனிதர் என்னை காப்பற்றுகிறாரா அல்லது என்னை சிக்கலில் மாட்டி விட்டாரா என்பது அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்.

பயத்தில் எனக்கு அழுகை வரும் போல இருந்தது எனினும் அதற்கெல்லாம் நேரம் இல்லாததால் அவருடன் ஓட தொடங்கினேன், நாங்கள் இருவரும் முள் காடு, வயல் வெளிகள் என்று ஒவ்வொரு இடமாய் ஓடி கொண்டிருந்தோம், சுமார் மூன்று மணி நேரம் ஓட்டம், தூரத்தில் அந்த சுமோ துரத்தி கொண்டே வந்தது எனக்கு பயம் ,எரிச்சல், கோவம் என்று கலவையான உணர்வுகள். 'நீங்கள் காதலித்தால் நீங்கள் இருவரும் செத்து தொலைக்கலாமே அநியாயமாய் என்னையும் இதில் எதற்காய் இழுக்க வேண்டும் என்று, இப்படி ஒரு காதல் உங்களுக்கு தேவையா என்றெல்லாம் திட்டி கொண்டே ஓடினேன்(அப்போதும் என்னுடைய ஒரு கொயர் நோட்டையும் என் பர்சையும் விடவில்லை). தண்ணீர் குடிக்க ஒரு வீட்டில் ஒதுங்கிய போது அவர்கள் நாங்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்து விட்டார்கள் எனக்கு எரிச்சல் தாளவில்லை. இதற்குள் நாங்கள் திருநெல்வேலியை விட்டு 5, 6 கிலோமீட்டர்கள் தள்ளி ஓடி வந்து விட்டோம். எனக்கு திடீர் என்று என்னுடன் ஓடி வந்து கொண்டிருந்த மருத்துவரின் பேரிலேயே சந்தேகம் வந்தது ஒரு வேளை இதெல்லாம் என்னை கடத்துவதற்கான சதியோ என்று ஆனால் அதற்கான காரணங்கள் இல்லை, அவரே என்னை இதில் இழுத்து விட்டுவிட்டதர்கான குற்ற உணர்வில் இருந்தார்.

மாலையானால் என்னை என் சித்தப்பா வந்து அழைத்து போக வருவதை கூறி இருந்தார்கள் எனக்கு அது வேறு பயம் எப்படி இவர்களிடம் இருந்து தப்பி அங்கே போவது என்று. ஒரு இடத்தில ஒளிந்து அமர்ந்திருந்த போது விடமால் ஷஷ்டி கவசம் சொல்லி இறைவா எப்படியாவது எங்களை காபற்றிவிடு என்று வேண்டினேன், இதற்குள் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அவங்க அங்க தான் இருகாங்க என்று கத்தினான் உடனே எனக்குள் ஒரு அதித சக்தி புகுந்தது போல வேகமாய் நான் அந்த மருத்துவர் என்னை பற்றி இருந்த கையை உதறி விட்டு தூரத்தில் தெரிந்த நெடுஞ்சாலையை நோக்கி ஓடினேன், சிஸ்டர் சிஸ்டர் வேண்டாம் அவர்கள் வருகிறார்கள் என்று சொன்னபடியே அவரும் என் பின்னால் வந்தார் நான் வேகமாய் ஓடி அந்த நெடுஞ்சாலையில் வந்த ஒரு பேருந்தை நிறுத்தினேன். உடனே அதுவும் நின்றது, அதில் ஏறி அமர்ந்தேன் சுதாகரும் என்னுடன் ஏறி வந்து என்ன சிஸ்டர் இப்படி செஞ்சிடீங்க பின்னால பாருங்க சுமோ வந்திட்டு இருக்கு என்று சொன்னார், நான் உடனே தயவு செஞ்சு என்னை விட்டு விடுங்கள் நான் போய் கொள்கிறேன் நீங்கள் உங்களை காப்பற்றி கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பேருந்து எங்கே போகிறது என்று கேட்டேன். அப்போது தான் பேருந்து தாழயுத்து என்ற இடத்திற்கு செல்வது தெரிந்தது அங்கே போய் இறங்கி வேறு ஒரு பேருந்தில் தான் மறுபடி திருநெல்வேலி வரவேண்டும், எனினும் நான் பயணசீட்டு வாங்கி விட்டேன், மூன்று நிறுத்தங்கள் வரும் என்று சொன்னார்கள். எனக்கு பயமாய் இருந்தது பின்னால் வரும் சுமோவை நினைத்தும் அந்த மருத்துவரின் நிலைமை குறித்தும், நான் தப்பி விடுவேன் என்ற எண்ணம் எனக்கு ஏனோ வந்து விட்டிருந்தது.

அடுத்த நிறுத்தம் வந்த உடன் அங்கே நிறுத்தத்தில் நின்ற பெண் ஒருத்தி மருத்துவரை பார்த்து இவன் தான் இங்கே தான் நிற்கிறான் என்று கூவினாள் உடனே இவர் பேருந்தில் இருந்து இறங்கி தெருவுக்குள் வேகமாய் ஓட ஆரம்பித்தார் அத்துடன் அவரை சில ஆண்கள் ஆயுதங்களுடன் துரத்தினார்கள் பேருந்து கிளம்பி விட்டது என்னால் நம்ப முடியவில்லை நான் இந்த பிரச்சனையில் இருந்து தப்பி விட்டுருந்தேன், ஆனால் என் பதட்டம் அடங்கவில்லை, பாவம் அந்த மருத்துவருக்கு என்ன ஆயிற்றோ என்ற வருத்தம் இருந்தது , சிஸ்டர் சிஸ்டர் என்று அவர் ஆழைதது நினைவு வந்து கொண்டே இருதது. பிறகு இன்னொரு பேருந்தை பிடித்து நல்ல பிள்ளை போல என் பயிற்சி இடத்திற்கு போய் அமர்ந்திருந்தேன் சித்தப்பா வந்து அழைத்த போது எதுவுமே அவரிடம் சொல் வில்லை , மறுநாள் செய்தி தாளை நடுக்கத்துடன் பார்த்தேன் ஏதேனும் மரண சம்பவங்கள் இருக்கிறதா என்று எதுவும் இல்லை ஒரு புறம் நிம்மதியும் மறுபுறம் வருத்தமுமாய் இருந்தது. அந்த மருத்துவரிடம் ஓடும் போது சொல்லி இருந்தேன் இப்படி ஆட்களை பலி கொடுக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது காதலில் என்று அவர் சொன்னார் காதலிபீர்கள் நீங்கள் அப்போது புரியும் உங்களுக்கு என்று அதுவும் நடந்து தான் விட்டது.

அந்த மருத்துவருக்கு அந்த பெண்ணுடனே கல்யாணம் நடந்திருக்குமா அவர்களுக்கு குழந்தைகள் இருக்குமா, அலல்து அவர் உயிருடன் இருக்கிறாரா.
அவ்வளவு நேரம் ஓடிய போது அவரிடம் கேட்ட தகவல் படி அவரின் காதலி வெகு அழகாய் இருப்பாளாம் அவளை ஒரு முறை கூட பார்க்க முடியாமல் போனோமே, அந்த காதல் என்னவாகி இருக்கும், இவர்களை எதிர்க்கும் இந்த ஜாதி மதம் பார்க்கும் சமுதாயம் எப்போது திருந்தும் என்றெல்லாம் எண்ணியபடி இருப்பேன் எனினும் எனக்கு ஆபத்து வந்த போது நானும் அந்த காதலை எதிர்க்க தானே செய்தேன் என்ற குற்ற உணர்வுடன், உடனே நானே தனக்கு மிஞ்சி தானே தானமும் தர்மமும் என்றும் சொல்லிகொள்வேன்.

1 comments:

Anonymous said...

'scribbles on akka' வில் எழுதிய உங்கள் பின்னுட்டத்தை இப்பொழுதுதான் பார்த்தேன்.
நேரமின்மையாலும் சோம்பலினாலும் மட்டுமே நான் பதிவுகள் இடுவது இல்லை. மற்றபடி மனதினுள் எழுத்து எப்பொழுதும் ஓடி கொண்டேதான் இருக்கிறது. உங்கள் பதிவுகளை இப்பொழுதுதான் படிக்க துவங்கி உள்ளேன். நிறைய எழுத வேண்டும் என ஆர்வம் தூண்டும் பதிவுகள். நன்றி!